கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் நேற்று (10) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நேற்று மாலை 7 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வது அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 43 வயது நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த கெனிஸ்டன் நேட்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பழனி ஷிரான் குளோரியன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கும்பல் இதனைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் புகுடு கண்ணா என அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜின் சீடராவார் எனவும், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.