பிரிட்டிஷ் பெண் ஒருவரின் நிதி அட்டையைக் கொள்ளை அடித்து, ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் சுமார் 250,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த மிகவும் வயது குறைந்த இளைஞரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் இருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இவர் கொள்ளையடித்துள்ளார்.பின்னர் குறித்த நபர் ஹட்டன் நகருக்கு வந்துள்ளார்.தனது நிதி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறையிட்டுள்ளார். இதனை அடுத்து அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணை வேட்டையில் இறங்கிய ஹட்டன் பொலிஸார், வாடகை வாகனம் ஒன்றில் எல்ல நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். களவாடிய நிதி அட்டையில் இருந்து வாங்கிய பொருட்களையும் மீட்டுள்ளனர். பிரிட்டிஷ் பெண்ணை ஹட்டன் வரவழைத்து, நிதி அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த நபர் கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.