கொழும்பு நகரில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடுகளைத் தடுக்க, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை சில முக்கிய பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே ஏழு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பதிவாகியுள்ளன. இதுவரை இந்த சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெலிகம, அத்திடிய, படோவிட்ட, கல்கிஸ்ஸ, கொஹுவல, மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில், துப்பாக்கிச் சூடுகளை கட்டுப்படுத்த தேவைப்படும் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையின் சிறிய குழுக்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இதன் மூலம், குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவசர வீதித் தடைகளை நிறுவி, விசேட அதிரடிப் படையினரை நிலைநிறுத்துவதுடன், நடமாடும் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.