மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம் (16) முகமூடியோடு வந்த நபர் சுட்டதில் 2 பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்கள். இது மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால், அதுவும் பொலிசார் பாதுகாப்பில் இருந்த வேளை இடம்பெற்றுள்ளதால். பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிடுகையில், இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும்.நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இன்றும் தொடர்ச்சியாக அந்த நொச்சிகுளம் கிராமத்தின் மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது .இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு தொடர்பாடல் அமைச்சரோடு நான் நேரடியாக பேசியிருந்தேன். காரணம் துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏ.கே 47 பாவிக்கப்பட்டுள்ளது .
இப்பொழுது எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியப்படவில்லை. இந்த துப்பாக்கி பிரயோகம் நொச்சிகுளம் மக்களை பார்த்து தான் பிரயோகிக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
மன்னார் பொலிஸாருடைய மெத்தனப் போக்கும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழலிலே மீண்டும் மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இந்த படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இது கண்டிக்கத்தக்கது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.