கைதாகி 1 மணி நேரத்தில் விடுதலையான அர்ச்சுணா MP: ஆனால் கைது வீடியோ TRP எகிறுகிறது

இன்று மாலை(29) கைதாகிய அர்ச்சுணா MP, இன்று மாலையே விடுதலையாகி, சிரித்த முகத்தோடு போட்டோ எடுத்து உடனே சமூக வலையத்தளங்களில் போட்டு விட்டார். ஆனால் கைதான வீடியோ பிச்சு கிழிச்சுக்கொண்டு ஓடுகிறது. மக்களுக்கு அவர் வெளியே வந்த விடையம் தெரியவில்லை. அர்ச்சுணாவை சிங்கள பொலிஸ் கைது செய்திருக்காம் என்று, அனைவரும் பார்க்கிறார்கள். சூப்பர் !

அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 20 ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் அனுராதபுரம் பொலிஸார் இந்த விடயம் குறித்து விசாரணைகளைத் தொடங்கி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.