அனுராவின் நேரடி கட்டளையால் கைது: ராணுவம் மன்னார் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தம்


மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய ராணுவச் சிப்பாய் கைதாகியுள்ளார். இதனை யார் செய்தது என்பது எமக்குத் தெரியும், என்று ஏற்கனவே செல்வம் MP கூறியிருந்த நிலையில். இங்கே என்ன நடந்தது என்று விசாரணை செய்யுமாறு, அனுரா சிறப்பு கட்டளை ஒன்றை பிறப்பித்து இருந்தார். இதனால் 3 நாளில் பொலிசார் குற்றவாளிகளைக் கைது செய்து விட்டார்கள் என எமது கொழும்பு நிருபர் தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  16ஆம் திகதி காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருந்த நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் விசேட தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் குறித்த  இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு  பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து  செல்லப்பட்டு  விசாரணைகள் முன் னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.